Archives: ஏப்ரல் 2022

இராக்காலத்தின் ஊழியக்காரர்கள்

அந்த தீவிர சுகாதார மருத்துவமனையில் அதிகாலை 3 மணி. ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே நாலாவது முறையாக அந்த கவலையுற்ற நோயாளி அழைப்பு மணியை அழுத்துகிறார். சற்றும் சலிப்பின்றி அந்த இரவுப்பணி செவிலியர் பதிலளிக்கிறார். உடனே மற்றொரு நோயாளி பராமரிப்பிற்காக அலறுகிறார். இதுவும் அச்செவிலியரை ஆச்சரியப்படுத்தவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன், தன் மருத்துவமனையின் பகல்நேர பரபரப்பை தவிர்க்கவே இரவுப்பணியை கேட்டுப்பெற்றாள். அப்பொழுது தான் உண்மை உரைத்தது. இரவுப்பணியில் எப்போதுமே நோயாளிகளை தனியாக தூக்குதல், நகர்த்துதல் போன்ற கூடுதல் பணிகளிருந்தன. மேலும் நோயாளிகளின் நிலையை கூர்ந்து கவனித்து, அவசர நேரங்களில் தக்க மருத்துவரை அழைக்கவும் வேண்டியிருந்தது.

சக இரவுப்பணியாளர்களின் நெருங்கிய நட்பு ஆறுதலாயிருப்பினும், இந்த செவிலியர் போதுமான தூக்கமின்றி அவதிப்படுகிறார். தன் பணி மிக முக்கியமானது என்று கண்டு, தனக்காக ஜெபிக்குமாறு தன் சபையாரை அடிக்கடி கேட்பார். தேவனுக்கே மகிமை! அவர்கள் ஜெபங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அவர் இப்படி துதிப்பது ஒரு இரவுப்பணியாளருக்கு நல்லது. நமக்கும் அது நல்லதே. சங்கீதக்காரன், “இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்” (சங்கீதம் 134:1–2) என்றெழுதுகிறார்.

இந்த சங்கீதம், ஆலய காவலாளர்களாய் இரவும் பகலும் தேவனுடைய ஆலயத்தை பாதுகாக்கும் லேவியர்களின் முக்கியப்பணியை பாராட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான உலகில், இந்த சங்கீதத்தை குறிப்பாக இரவுப்பணியாளர்களுக்கு பகிர்வது ஏற்றதாயிருக்கும், எனினும் நாம் அனைவரும் தேவனை இரவிலும் துதிக்கலாம். சங்கீதக்காரன், “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக” (வச. 3) என்று ஆறதல்படுத்துகிறார்.

ஆவிக்குரிய நோய் கண்டறிதல்

என் மாமனாரின் கணையத்திலிருந்த புற்றுநோய் கட்டியை கிமோ சிகிச்சை கட்டுப்படுத்தியது, ஆனால் பலனளிக்கவில்லை. அக்கட்டி மீண்டும் வளர ஆரம்பிக்க, அவர் வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் தன் மருத்துவரிடம், “இந்த கிமோ சிகிச்சையை நான் இன்னும் தொடரத்தான் வேண்டுமா? ஒருவேளை மாற்று மருந்தோ, கதிர்வீச்சு சிகிச்சையை முயற்சிக்கலாமா?” எனக் கேட்டார்.

யூத ஜனங்களும் தங்கள் ஓட்டத்தில் வாழ்வா சாவா என்ற கேள்வியோடிருந்தனர். யுத்தத்தினாலும், பஞ்சத்தினாலும் சோர்ந்துபோன தேவ ஜனங்கள், தங்கள் பிரச்சனைக்கு காரணம் அதிகமான விக்கிரக ஆராதனையா, அல்லது விக்கிரக ஆராதனை போதுமானதாக இல்லையென்பதா என குழம்பினர். வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அதற்குப் பானபலிகளை அதிகம் வார்த்தால், அது தங்களைப் பாதுகாத்து, செழிப்படையச் செய்யும் என முடிவெடுத்தனர் (எரேமியா 44:17).

அவர்கள் மிகவும் தவறாக தங்கள் சூழ்நிலையை புரிந்துகொண்டதாக எரேமியா சொல்கிறார். விக்கிரகத்தை ஆராதிப்பதில் ஏதேனும் தவறு செய்துவிட்டோமா என்று அவர்கள் யோசித்தனர், ஆனால் அந்த விக்கிரகங்களை அவர்கள் வைத்திருந்தது தான் அவர்களின் தவறு. அவர்கள் தீர்க்கதரிசியைப் பார்த்து, “நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்” (வச. 16) என்றார்கள். எரேமியா, “நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும் இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்” (வச. 23).

யூதாவைப் போலவே, நாமும் நம்மை சிக்கலில் அகப்படுத்திய பாவங்களை இருமடங்காக்கச் செய்ய தூண்டப்படலாம். உறவில் சிக்கலென்றால் நாம் தனித்து வாழ்கிறோம்; பணப்பிரச்சனை என்றாலும் நம் விருப்பப்படியே செலவுசெய்கிறோம். ஒதுக்கிவைக்கப்பட்டால் நாம் அதற்கு சமமாக மூர்க்கமடைகிறோம். ஆனால் நம் பிரச்சனைகளுக்கு காரணமாயிருந்த விக்கிரகங்கள் நம்மை காப்பாற்றப் போவதில்லை. நாம் இயேசுவிடம் மனந்திரும்பும்போது, அவரே நம் பிரச்சனைகளினூடே நம்மை தூக்கி சுமப்பார்.

விசுவாசத்தில் வளர்தல்

என் தோட்டக்கலை பயணத்தின் ஆரம்பத்தில், நான் காலமே எழுந்து என் காய்கறி தோட்டத்திற்கு விரைந்தோடி, ஏதாகிலும் புதிதாய் முளைத்துள்ளதா என பார்ப்பேன். ஒன்றுமிருக்காது! “விரைவான தோட்ட வளர்ச்சி” என்று இணையத்தில் தேடுகையில், செடியின் வாழ்நாளில் நாற்று பருவமே மிக முக்கியமென்று கற்றுக்கொண்டேன். இம்முறையை விரைவாக்க இயலாது என அறிந்தவளாக, விண்ணை நோக்கி மண்ணிலிருந்து முளைத்தெழும் தளிர்களின் வலிமையையும், பருவநிலை மாற்றத்திற்கேற்ற அவைகளின் எதிர்பாற்றலையும் வெகுவாய் ரசித்தேன். சில வாரங்கள் பொறுமையாய் காத்திருந்தபின், பச்சை மொட்டுக்கள் மண்ணிலிருந்து வெடித்தெழும்பி என்னை வரவேற்றன.

சிலவேளைகளில், நம் சுபாவத்தின் வளர்ச்சியானது காலப்போக்கிலும், போராட்டத்தின் மூலமாகவும் தான் உண்டாகுமென்று நாம் அறிவதில்லை. அதினால் நம் வாழ்வின் வெற்றிகளையும், அதினால் உண்டாகும் மகிழ்ச்சியையும் சுலபமாக கொண்டாடுகிறோம். யாக்கோபு, “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, ... அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக்கோபு 1:2-3) என்று நம்மை அறிவுறுத்துகிறார். ஆனால் சோதனைகளைக் குறித்து சந்தோஷப்பட என்ன இருக்கிறது?

சிலசமயம், தேவன் நம்மை சவால்களினூடும், கஷ்டங்களினூடும் செல்ல அனுமதிக்கிறார். அதினால் நாம் அவருடைய அழைப்பிற்கேற்றபடி வனையப்பட முடியும். “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” (வச. 4) நம் வாழ்வின் சோதனைகளிலிருந்து நாம் வெளியே வர தேவன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இயேசுவில் உறுதியாய் நாம் நிலைத்திருக்கையில், எத்தகைய சவாலிலும் நீடியபொறுமையாய், வலிமையாக வளர்ந்து முடிவில் ஆவிக்குரிய கனியானது நம் வாழ்வில் மலரக் காண்போம் (கலாத்தியர் 5:22–23). ஒவ்வொரு நாளும் நாம் உண்மையாக செழித்தோங்க தேவையான ஊட்டச்சத்தை, அவருடைய ஞானமே நமக்குக் கொடுக்கிறது (யோவான் 15:5).

மீண்டும் பாடுங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபல ரீஜண்ட் தேனுண்ணி பறவையினம் ஆபத்திலுள்ளது. அதின் இன்னிசைக்குரல் குருகுகிறது. முன்னர் அதிகளவில் இருந்தவை, தற்போது வெறும் முன்னூறு பறவைகளே மீந்துள்ளனவாம். கற்றுத்தர கூடியவைகள் சிலமட்டுமே உள்ள நிலையில், ஆண்பறவைகள் தங்கள் தனித்துவமான பாடலை மறந்து, தங்கள் துணையை ஈர்க்க தவறுகின்றன.

அதிர்ஷ்டவசமாக சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் இந்த தேனுண்ணிகளை மீட்க ஒரு திட்டம் வகுத்துள்ளனர். அவைகளுக்காக தாங்கள் பாடுவதே அந்தத் திட்டம். அதாவது, பிற தேனுண்ணிகள் பாடுவதை ஒலிப்பதிவு செய்து அவைகளைக் கேட்கச்செய்தால், தங்கள் ஆழ்மனதில் உள்ள பாடலை மீண்டும் கற்கின்றன. ஆண் பறவைகள் இசைமெட்டோடு பாடுகையில் தங்கள் ஜோடிகளை மீண்டும் ஈர்க்கும். அவ்வாறு செய்வதின் மூலம் இனவிருத்தி உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
தீர்க்கதரிசி செப்பனியா, உபத்திரவத்திலிருந்த ஜனங்களிடம் பேசுகிறார். தங்களுக்குள் மிகவும் சீர்கெட்டுபோனதால், தேவனுடைய நியாயத்தீர்ப்பு வருவதாக உரைக்கிறார் (செப்பனியா 3:1–8). பிற்காலத்தில், கைப்பற்றப்பட்டு சிறையிருப்புக்குள் செல்வதின் மூலம் இது நிறைவேறுகையில், ஜனங்களும் தங்கள் பாடலை மறந்தனர் (சங்கீதம் 137:4). ஆனால் செப்பனியா, நியாயத்தீர்ப்புக்கு பின்னான காலகட்டத்தை முன்னமே பார்க்கிறார். நாடுகடத்தப்பட்ட இந்த ஜனங்களிடம் தேவன் வந்து, அவர்கள் பாவங்களை மன்னித்து, அவர்களுக்காக பாடுகிறார், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதின் முடிவாக, ஜனங்களின் ஆத்மார்த்தமான பாடல் மீட்டெடுக்கப்படும் (வச. 14).

நம்முடைய கீழ்படியாமையாலோ, வாழ்வின் சோதனைகளாலோ நாமும் நம் மனதிற்கினிய பாடலை இழந்திருக்கலாம். ஆனால் நமக்காக மன்னிப்பின் பாடல்களையும், அன்பின் பாடல்களையும் ஒரு குரல் பாடுகிறது. நாமும் அவருடைய இசையை கவனித்துக்கேட்டு அவரோடு சேர்ந்து பாடுவோமாக.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, “ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது” மற்றும் பிறருடன் “ஏகசிந்தையுள்ள வர்களாயிருப்பது” (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது. 

 

நான் ஓட்டுநர் மட்டுமே

“அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?” பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். “கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்” என்றேன்.

“நான் ஓட்டுநர் மட்டுமே” என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு “வாகன ஓட்டுநராக” இரவில் வாகனம் ஓடுவதை இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.

மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு இருக்கும்? ஏனென்றால், நாம் “வெறும் ஓட்டுநர்” என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது. 

 

கிறிஸ்துவில் முடிப்பவர்களாக இருத்தல்

கலாவதி தனது கொள்ளுப்பேரனான ராஜேஷுக்காக பின்னிக்கொண்டிருந்த கம்பளிச்சட்டையை முடிப்பதற்குள் இறந்துவிட்டார். அதை நிறைவுசெய்ய மற்றொரு ஆர்வமுள்ள பின்னல்காரரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. “நிறைவு செய்பவர்கள்” எனப்பட்ட தன்னார்வ கைவினைஞர்களையும், தங்கள் பணிகளை முடிப்பதற்கு முன்னரே இந்த வாழ்க்கையை விட்டு வெளியேறினவர்களின் அன்புக்குரியவர்களையும் இணைக்கும் ஒரு நிறுவனத்திற்கு நன்றி. “நிறைவு செய்பவர்கள்” துக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு பணியை முடிக்க தங்கள் நேரத்தையும் திறமையையும் அன்புடன் செலவிடுகின்றனர்.

தேவன் எலியாவின் பணிக்காகவும்கூட ஒரு “நிறைவு செய்பவரை” நியமித்தார். இஸ்ரவேலர்கள் தேவனின் உடன்படிக்கையை நிராகரித்து தீர்க்கதரிசிகளைக் கொல்வதைக் கண்டு அந்தத் தீர்க்கதரிசி தனிமையாகவும் மனச்சோர்வுடனும் இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தேவன் எலியாவிடம் “எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (1 இராஜாக்கள் 19:16) என அறிவுறுத்தினார். தேவனுடைய சத்தியத்தைப் பிரகடனப்படுத்துவதற்கான பணியானது எலியாவின் மரணத்திற்குப் பின்னரும் தொடரும் என்பதை இது உறுதி செய்தது.

எலியாவுக்குப் பின் தேவனின் தீர்க்கதரிசியாகத் தொடரும்படி தேவன் அவரை அழைத்தார் என்று எலிசாவுக்கு காண்பிக்க, எலியா “அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்” (வ. 19). தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான தேவசெய்தியை அறிவிப்பவா் ஒருவரின் அதிகாரத்தைக் குறிக்க ஒரு தீர்க்கதரிசியின் சால்வை பயன்படுத்தப்பட்டதால் (பார்க்க 2 இராஜாக்கள் 2:8), இந்த செயல் எலிசாவின் தீர்க்கதரிசிக்கான அழைப்பைத் தெளிவாக்கியது. இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, தேவனின் அன்பைப் பிறருடன் பகிரவும், “[அவருடைய] புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்பணியானது நம் ஆயுளை விட அதிகமாக இருப்பினும், அவர் இப்பணியை ஆதரிப்பார் என்றும், அவரை அறிவிக்கும் உன்னதமான வேலைக்கு பிற “நிறைவு செய்பவர்களை” தொடர்ந்து அழைப்பார் என்றும் நாம் நிச்சயம் நம்பலாம்.